“அது என்னை ரொம்பவே பாதித்தது..கருப்பாக இருப்பவர்களுக்கும் திரைப்படங்களில் சிறந்த பாத்திரங்களை கொடுங்கள்” - ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்
இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்தியர் தான். இதில் வட இந்தியா தென் இந்தியா என்ற பாகுபாடு இல்லை என இசயமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வட இந்தியா தென் இந்தியா என்ற பாகுபாடு தேவையில்லை என்றும், ஒற்றுமையே முக்கிய தேவை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஹ்மான், தான் ஒருமுறை மலேசியா சென்றிருந்ததாகவும் அங்கு ஒரு சீன மனிதரை சந்தித்ததாகவும், அப்போது அந்த சீனர் வட இந்தியர்கள் நல்ல நிறமாக இருப்பதாகவும், தான் வட இந்திய படங்களை விரும்பி பார்ப்பதாகவும் கூறினார் என்றார்.
மேலும், அது தன்னை மிகவும் பாதித்ததாக கூறிய ரஹ்மான் தென்னிந்திய படங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த பாத்திரங்களை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
வட இந்தியா தென் இந்தியா என்ற பாகுபாடு இல்லை எல்லாரும் இங்கு இந்தியர்கள் தான். இங்கு ஒருவர் செய்யும் காரியத்தால் வடக்கில் இருப்பவர் பலனடைகிறார். அங்கு அவர்கள் செய்யும் ஏதோ ஒரு விஷயத்தால் தெற்கில் இருக்கும் நாம் பலனடைகிறோம். இதில் எதற்கு பாகுபாடு எனவும் அவர் தெரிவித்தார்.