தொண்டர்களின் முடிவு....கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம்...இபிஎஸ் திட்டவட்டம்
2 கோடி தொண்டர்களின் உணர்வில் எடுக்கப்பட்டது கூட்டணி முறிவு என கூறி, அதில் உறுதியாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை துவங்கி வைத்த பிறகு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என தெரிவித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர போகும் கட்சிகளை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்த இபிஎஸ், கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு நழுவியது என்றார்.
திமுகவிற்கு ஆட்சி தான் முக்கியம்
தொடர்ந்து பேசிய அவர், வாக்குறுதிகள் நிறைவேற்றம் தொடர்பாக முதல்வர் குறைவது பொய் என குற்றம்சாட்டிய அவர், அதிமுக எம்.எல்.ஏ'க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது தொகுதி நலனுக்காக தான் என விளக்கம் அளித்தார். கூட்டணி விவகாரத்தில் "இந்தியா" கூட்டணி தான் நாடகமாடுகிறது என குற்றம்சாட்டி, காவிரி நீரைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், திமுகவிற்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம் என கூறி, விவசாயிகளின் நலனில் அக்கட்சிக்கு அக்கறை இல்லை என சாடினார். மேலும், அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க பாஜக நெருக்கடி தந்ததாக கூறுவது தவறு என்றும் தங்கள் பாஜக மேலிடத்திடம் அண்ணாமலையை மாற்ற கோரவில்லை என்றும் விளக்கமளித்தார்.