ஸ்டெர்லைட் ஆலையை வேறு எங்கும் இடமாற்றம் செய்யப்போவது இல்லை - வேதாந்தா நிறுவன தலைவர் திட்டவட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலங்களுக்கு மாற்றும் திட்டம் இல்லை என வேதாந்தா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 போராட்டக்காரர்கள் பரிதாபமாக பலியானார்கள். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்யகோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு தற்போது வரி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை வேறு எந்த மாநிலத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவுவதற்கான கோரிக்கைகள் வந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை எனவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், நேர்மையான தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தனை ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை மூடியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பணி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தாமிரத்தை உற்பத்தி செய்வதை விரும்பாத சர்வதேச சுய நலவாதிகளால் தான் போராட்டங்கள் தூண்டப்பட்டதாக கூறிய அகர்வால், உள்ளூர் மக்கள் இந்த திட்டத்திற்கு பெருமளவில் ஆதரவு அளிக்கின்றனர். அதனால் உள்ளூர் அம்சங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.