பிளவுப்படுகிறதா..? காங்கிரஸுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மியின் அமைச்சர் அதிரடி
வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காது என அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
I.N.D.I.A கூட்டணியில் ஆம் ஆத்மி
வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சியை தாண்டி பல எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியேனும் பாஜகவை தோற்கடித்திட வேண்டும் என காங்கிரஸ் கட்சி பலமான எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்து வருகின்றது.
இந்த கூட்டணியில் திமுக, ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளை கடந்து அந்தந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வரும் மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லி பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வலுவான காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து எதிர்த்து சட்டமன்ற தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி தற்போது இந்த கூட்டணியில் இடம்பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மிக பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது.
ஒருபோதும் கூட்டணி இல்லை
ஆனால் இது மாநில அரசியலில் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தற்போது கூறிவிடமுடியாது.இந்நிலையில் பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவரும் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான அன்மோல் ககன் மான் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியில் ஆம் ஆத்மி சேர்ந்திருப்பது தேசிய அளவிலானது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் ஒருபோதும் எவ்வித கூட்டணியும் அமைக்க மாட்டோம் என தெரிவித்திருக்கிறார்.
இந்த கருத்தின் மூலம் தேசிய அரசியலில் ஏதேனும் சிக்கல் இந்த கூட்டணி எதிர்கொள்ளுமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.