எட்டாவது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
பதவி ராஜினாமா
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று இருந்த நிலையில் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
எட்டாவது முதலமைச்சர்
இதனை தொடர்ந்து ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரிய நிதிஷ் குமார் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆளுநரும் நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 2 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் துணை முதலமைச்சராக ஆர்.ஜே.டி கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.