ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற பிரதமர் மோடி? சஞ்சய் ராவத் பரபர தகவல்
அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவில் இருந்து ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும் என சஞ்சய் ராவத் தகவல் தெரிவித்துள்ளார்.
மோடி ஓய்வு?
மும்பையில் உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும்.
தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன. பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை.
சஞ்சய் ராவத் தகவல்
தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முன்னதாக நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவருக்கும், ஆர்எஸ்எஸ்-ன் இரண்டாம் சர்சங்கசாலக் மாதவ சதாசிவ கோல்வால்கருக்கும் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.