‘எனக்கு இந்த உலகில் வாழவே ஆசை இல்லை’ - புது ட்விஸ்டு வைக்கும் நித்தி : கைலாசாவில் நடப்பது என்ன?
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் பிரபலமான நித்தி கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார்.
அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக அங்கிருந்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இதனிடையே அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக்கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
மேலும் ‘நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு’ என்று அவர் எழுதுவது போல புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு புதிய பதிவு வெளியானது. அதில்,
“பரமசிவனின் ஆசிகள்! அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி, அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளது. எனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை.
சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன.
அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது. ஒரே விஷயம், என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது.
இதே போல எனக்கு உறக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை. என்னை கவனித்து கொண்டிருக்கும் டாக்டர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள்.
6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இவ்வாறு நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான். எனவே சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை. எனது கிரகங்களும், அனைத்து கிரகங்களும் எனக்கு சாதகமான நிலையில் உள்ளன. எனவே எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை.
இப்போது கைலாசாவில் சிறிய விமான நிலையம் உள்ளது. ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பு இல்லை. என்னை கவனித்து கொள்ளும் மருத்துவர் பக்தர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு போன்ற பல இயந்திரங்கள் இருந்தால் அவர்கள் என் உடலை மேம்படுத்தி அதை செய்ய முடியும்.
எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளீர்கள்.
எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, எனது வாழ்க்கை மற்றும் நான் செய்த வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை.
எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார்.
என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும், உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவர்.” என குறிப்பிட்டுள்ளார்.