மதுரை ஆதீனமாக பதவியேற்ற நித்யானந்தா- பேஸ்புக்கில் அறிவிப்பால் சர்ச்சை
மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்று கொண்டதாக நித்யானந்தா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதியான அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனிடையே மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை கடும் சர்ச்சைகளை கிளப்பியது. கடந்த 2012 ஏப்ரல் 27 ஆம் தேதி நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.
அப்போது கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து 2012 டிசம்பர் 19 ஆம் தேதி அன்று அந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். அதன்பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார்.
இந்நிலையில் மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.
இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும், தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என மாற்றிக்கொண்டதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.