"5ஜி சேவை, டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் வங்கி மையங்கள்" - மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு
ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேசி வருகிறார்.
அதில், “5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும். தொலைத்தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைக்கற்றை ஏலம் விடப்படும்.” என தெரிவித்தார்.
மேலும், “ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் விற்பனை விரைவில் தொடங்கும் எனவும், ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
டிஜிட்டல் பணத்திற்காக புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும். 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “மின்சார வாகனங்களுக்காக ஊரக பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். எலக்ட்ரிக் வாகங்களுக்கான பேட்டரிகளை மாற்றும் வசதி கொண்டு வரப்படும்”என்று தெரிவித்தார்.