"க்ரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவை தான் க்ரிப்டோகரன்சியை சுற்றி இருக்கும் மிகப்பெரிய சவால் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணயம் நிதியத்தின் உயர் மட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அவர்,
“உலக அளவில் க்ரிப்டோகரன்சியை பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க பயன்படுத்துவதே பெறும் சவாலாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு நாம் தொழில்நுட்ப பயன்பாடை ஒழுங்குப்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டு தரவுகளின்படி இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை 85 சதவீத வேகத்தில் தழுவி வருகிறது.
உலக அளவில் 64 சதவீதம் டிஜிட்டல் கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. பெருந்தொற்று நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கவும், அவற்றை சாதாரண மக்கள் வரை பயன்படுத்தவும் பெரிதும் உதவி இருக்கிறது.
இந்தியா க்ரிப்டோகரன்சி, பிளாக்செயின், ஃபிண்டெக் ஆகியவற்றை நிறுத்தவிரும்பவில்லை. கேபினெட் மூலம் க்ரிப்டோகரன்சிக்கு ஒழுங்குமுறையை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.