ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக - நிர்மலா சீதாராமன் ஆவேசம்
மகாபாரதத்தை கனிமொழி மேற்கோள் காட்டிய நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலை இழுத்தவர்கள் திமுகவினர் என ஆவேசமாக பேசியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர். அப்போது விவாதத்தில் பேசிய திமுகவின் எம்.பி கனிமொழி, சிலப்பதிகாரத்தை பாஜகவினர் படிக்க வேண்டுமென்றும், மகாபாரத திரௌபதி குறித்தும் கருத்து தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் பதில்
இன்று அதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆவேசமாக பல கருத்துக்களை முன்வைத்தார். அவர் குறிப்பாக திமுகவை எதிரித்து பல கருத்துக்களை முன்வைத்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட காலதாமதம் ஆவதற்கு மாநில அரசு நிலம் கொடுக்க நேரம் தாழ்த்தியது தான் என கூறினார்.
மேலும், மணிப்பூர் கலவரத்தை வைத்து மகாபாரதத்தை பற்றி கனிமொழி பேசிய நிலையில், அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மகாபாரதத்தை குறித்து பேசும் திமுகவினர் தான் சட்டமன்றத்தில் 1989-ஆம் ஆண்டு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார்கள் என ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.