தொடங்கியாச்சு இரவு நேர ஊரடங்கு - அடுத்தடுத்து பல மாநிலங்களில் அமல்
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவிக்க தயாராகி வருகின்றன.
தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட 19 மாநிலங்களில் பரவி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று டெல்லி, இன்று கேரளா என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குமென்றும், இது மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் இடையே மீண்டும் நோய்த் தொற்று பீதி ஏற்பட்டுள்ளது.