பஹல்காம் தாக்குதல்; இருவரை கைது செய்த NIA - விசாரணையில் வெளியான உண்மை
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின், நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் தளங்களை இந்திய ராணுவம் தாக்கியழித்தது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுலைமான் என்கிற ஹாஷிம் மூசா, தல்ஹா பாய் என்ற அலி பாய் ஆகிய 2 பாகிஸ்தானியர்கள் மற்றும் அப்துல் ஹுசைன் தோகர் என்ற ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் வரைபடத்தையும் காவல்துறை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், NIA விசாரணை நடத்தி வருகிறது.
இருவர் கைது
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தாக்குதல் சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களிடம் NIA விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பஹல்காமின் பட்கோலே பகுதியை சேர்ந்த பர்வேஸ் அகமது மற்றும் பஹல்காமின் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்து உதவியுள்ளனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் (LeT) தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.