அடுத்த குடியரசுத் தலைவர் யார்? ரேஸில் முந்திச் செல்லும் தமிழிசை? நடப்பது என்ன?
அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற விவாதம் தேசிய அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைய உள்ளது.
இவருக்குப் பின்னர் யார் அந்த இடத்தில் அமர வைக்கலாம் என்ற விவாதம் பாஜக உயர்மட்டத்தில் நடந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துதான் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே தேசிய அளவில் பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவது மிக முக்கியம்.
குடியரசுத் தலைவருக்கான ரேஸில் தற்போது யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாஜக புள்ளிகள் தமிழிசை பெயர் அடிபடுவதாக சொல்கிறார்கள்.
பாஜக ஆட்சிக்காலத்தில் தான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது பெண் ஒருவரை கொண்டு வர பாஜக தலைமை நினைக்கிறதாம். அதில்தான் தமிழிசை பெயர் முன்னிலையில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுக்கு மற்ற மாநிலங்களில் செல்வாக்கு இருந்தாலும் தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக செல்வாக்கு கிடையாது.
இதனால் தமிழிசையை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தினால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆதரவு கிடைக்கும் என்று கணக்கு போட்டு வருகிறது.
இருப்பினும், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு பின்னர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்.
மாநிலங்களவையிலும் இந்த ஆண்டு 75 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கிட்டே குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என அழுத்தம் திருத்தமாக சொல்கிறது டெல்லி வட்டாரங்கள்.