இப்ப யாருக்குமே நல்ல எண்ணமே கிடையாது , அதான் நல்ல பொண்ணு கிடைப்பதில்லை , அப்படியே கிடைச்சாலும் ? - மதுரை ஆதீனம் சாபம்
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி இதுவரை 427 நபர்களிடமிருந்து சுமார் 1,543 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் கோவில்களுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை பாக்கி, குத்தகை பாக்கி போன்றவையும் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருக்கோயில்களின் நிலம் மற்றும் கடைகளை அனுபவிப்பவர்கள் வாடகை, கடன் தொகை செலுத்தாமல் இருப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் வவ்வால்களாகவோ, பெருச்சாளிகளாகவோத்தான் பிறப்பார்கள் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தஞ்சாவுரில் உள்ள ஸ்ரீ ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்:
கோவில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோவில் கடையில் இருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் இருந்தாலோ, கோயிலுக்கு கடனை செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள் இல்லையேல் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ அல்லது மூஞ்சூரு எலியாகவோதான் பிறக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது பலருக்கு நல்ல எண்ணமே கிடையாது அதனால்தான் நல்ல சம்பளம், அழகு இருந்தும் பெண் கிடைப்பதில்லை. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை.
நல்ல மாமியார் கிடைத்தாலும் மருமகள் சரியாக இருப்பதில்லை என்று சரமாரியாக, சாபம் கொடுக்கும் தொனியில் மதுரை ஆதீனம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.