இன்று நேருக்கு நேர் மோதும் இந்தியா vs நியூசிலாந்து - வெற்றி வாய்ப்பு யாருக்கு? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்டனில் இன்று தொடங்குகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை 2019 இல் அறிவித்தது ஐசிசி. டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 8 நாடுகள் முதல் இடத்தை பிடிக்க கடுமையாக போராடியது. கடைசியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனால் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் முதல் முறையாக மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த உற்சாகத்துடன் இந்தியாவை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து அணி வெளியிட்டது.
ஆனால் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை நேற்று தான் அறிவித்தது.
இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் என உச்சக்கட்ட எதிர்பார்பில் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.