நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டி - இந்தியாவுக்கு கடினம் : யுவராஜ் சிங்!
நியூசிலாந்து உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இந்தியாவுக்கு சற்று கடினமாகவே இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் முதல் டெஸ்டில் தோற்றாலும், அடுத்த இரு டெஸ்டில், சரிவில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடி வருவதால் அந்த வகையில் இந்தியாவை விட அவர்களே ஒரு படி மேலே இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் பேட்டிங்கில் ஒப்பிடும்போது நியூசிலாந்தை விட இந்தியாவின் பேட்டிங் வரிசை வலுமிக்கது. ரோகித் சர்மா இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவசாலியாக மாறி விட்டார்.
ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இணைந்து இங்கிலாந்து மண்ணில் தொடக்க ஆட்டக்காரராக ஆடியதில்லை. டியூக்ஸ் வகை பந்து ஆரம்பத்திலேயே ஸ்விங் ஆகும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
எனவே அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி சீக்கிரமாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.