வீட்டில் கழிப்பறை இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட புது மணப்பெண்
கடலூரில் திருமணமான ஒரே மாதத்தில் தூக்கிட்ட நிலையில் பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரும், கடலூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரம்யா நேற்று தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
கார்த்திகேயன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதது ரம்யாவுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்துள்ளது. ஆகவே கழிப்பறை உள்ள வீடு பார்க்க வேண்டுமென ரம்யா கார்த்திகேயனிடம் வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் தொடர்ந்து கழிப்பறை உள்ள வீடு பார்க்க வலியுறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ரம்யா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் ரம்யாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி கொடுத்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரம்யா குடும்பத்தார் இந்த தற்கொலை குறித்து கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.