தேனிலவு சென்ற புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு; மாயமான புதுப்பெண் - நடந்தது என்ன?
தேனிலவுக்காக சென்ற இளம்ஜோடி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான ஜோடி
மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (29). போக்குவரத்து தொழிலதிபரான இவருக்கு, சோனம் என்பவருடன் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
பின் தேனிலவுக்காக இளம் தம்பதி இருவரும் கடந்த மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குச் சென்றனர். அங்கு சோஹ்ராவை (சிரபுஞ்சி) பார்வையிட இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்தனர். அதற்கிடையில் குவஹாத்தியில் உள்ள மா காமாக்யா கோயிலுக்குச் சென்றனர்.
தீவிர விசாரணை
பின், நோங்ரியாட் கிராமத்தில் தங்கியிருந்த இளம் ஜோடி, மே 23 அன்று காணாமல் போனார்கள். இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்துள்ளது. இதுதொடர்பாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
தொடர் விசாரணையில் தம்பதியினர் காணாமல் போன 8 நாட்களுக்குப், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்து ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்த நபரின் வலது கையில் பச்சை குத்தியதன் மூலம் அது ராஜா ரகுவன்ஷி தான் என்று அவரது சகோதரர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஒரு பெண்ணின் சட்டை, மருந்துகள், ஒரு மொபைலின் எல்.சி.டி திரையின் ஒரு பகுதி மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை கண்டறியப்பட்டது. ஆனால் மனைவி சோனம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 11 நாட்களாக அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.