சொந்த திருமணத்தையே திடீரென நிறுத்திய நியூசிலாந்து பிரதமர் - என்ன காரணம்?
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது திருமணத்தை நிறுத்தி உள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவை எதிர்கொண்டதில் சிறப்பாக செயல்பட்ட நாடு என்று உலகளவில் பெயர் பெற்ற நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் பதவி வகித்து வருகிறார். அங்கு இதுவரை மொத்தமாக பதிவானது 15,550 கேஸ்கள்தான் உள்ள போதிலும், இதுவரை 52 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். தற்போது சிகிச்சையில் 1,096 பேர் உள்ளனர்.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக அங்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் அங்கு ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் ஏற்பட்டது. இவர்கள் நியூசிலாந்தில் பல மாகாணங்களுக்கு திருமணம் உள்ளிட்ட பல விழாக்களில் கலந்து கொள்ள சென்றனர். இதனால் அங்கு புதிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70ஐ தாண்டியுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ரெட் செட்டிங் எனப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரிய அளவில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள், கூட்டங்களில் 2 டோஸ் போட்ட 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஜெசிந்தா ஆர்டர்ன் தனது நீண்ட கால காதலர் கிளார்க் கேபோர்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார் . இதற்காக அவர் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இதற்காக அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த நாட்டின் பேவரைட் ஜோடி இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.