தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரூ.8 ஆயிரம் பரிசு - அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசாக வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல் மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்களை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு( இந்திய மதிப்பில் ரூ.8 ஆயிரம்) கிடைக்கும் என அந்நகர மேயர் டெ பிளாசியோ அறிவித்துள்ளார்.
ஜூலை 30 முதல் செப்டம்பர் 2வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.