இத்தனை மணி நேரம் தான் இனி மலைக்கோயிலுக்கு செல்ல முடியும் - திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தேவசத்தானம் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வது தொடர்பாக பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
சிறுத்தை தாக்குதல்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று திருப்பதிக்கு வந்திருந்தனர். அவர்கள் இரவு நேரத்தில் அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்றுள்ளனர். அவர்களின் லக்ஷிதா என்ற 6 வயது மகள் நரசிம்ம கோவில் அருகில் பெற்றோரை தாண்டி சில படிகள் முன்னே நடந்து சென்றபோது சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று கூண்டு வைத்து சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
தேவஸ்தானம் முடிவு
அந்த வகையில் அலிபிரி மலைப்பாதையில் நடந்து செல்வோருக்கு தேவஸ்தானம் சார்பில் கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது. 5 அடி உயரம் கொண்ட கைத்தடி ஒவ்வொரு பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. கீழே இருந்து கொடுக்கப்படும் கைத்தடி மலை மேல் சென்றவுடன் அங்கு வாங்கிக்கொள்ளப்படும்.
மீண்டும் அதை கீழே வருபவர்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குறைந்த பட்சம் 100 பேருடன் செல்ல வேண்டும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைப்பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் 10 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். இரு சக்கர வாகனங்கள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.