இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே..!
இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
அதளபாதளத்திற்கு சென்ற பொருளாதாரத்தல் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்தது. இதையடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர்.
அவர்களின் போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 9-ந்த தேதி பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது.போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு தீ வைத்தனர். இடைக்கால அரசை நியமிக்க அதிபர் கோட்டபய ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் இடைக்கால அரசு அமைப்பதில் சிக்கல் உண்டானது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரதமர் பதவியை ஏற்பதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரனில் விக்ரமசிங்கேவை நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு ரனில் விக்ரமசிங்கேவிடம் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார்.
இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரனில் பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6வது முறையாக அவர் பிரதமர் ஆகி உள்ளார்.