ஜப்பான் புதிய பிரதமர் பதவியேற்பு - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் பொதுமக்கள்
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜப்பானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ஷின்ஜோ அபே தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகியதை தொடர்ந்து, அவரது வலது கரமாக இருந்து வந்த யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக பதவி ஏற்றார். பொதுவாக அங்கு ஆளும்கட்சியின் தலைவராக இருப்பவரே அந்த நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.
இதனிடையே செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் யோஷிஹைட் சுகா கடந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் கடந்த வாரம் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தேர்தலை நடத்தியது. இதில் அக்கட்சியின் தலைவராக ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சராக இருந்த புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பிலும் கிஷிடா வெற்றி பெற்றார்.
இதனையடுத்து நேற்று புமியோ கிஷிடா புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. புதிதாக 13 பேர் முதல் முறையாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜப்பான் புதிய பிரதமரான கிஷிதா ஃபுமியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “ இந்தியா-ஜப்பான் கூட்டுறவை பலப்படுத்தவும், நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.