டெல்லியில் அமையவிருக்கும் பிரம்மாண்ட சர்வேதேச விமான நிலையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைக்க இந்திய அரசு முக்கிய ஒப்புதல்களை கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை பிரதமர் நரேந்திர மோடி ஜேவாரில் அடிக்கல் நாட்ட இருக்கிறார். அதிக மக்கள்தொகையை கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்து வருகிறது.
புதுடெல்லி விமான நிலையத்திற்கு போட்டியாக மிகப்பெரிய விமான நிலையத்தை டெல்லி அருகே உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விமான நிலையம் தில்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது உருவாக்கப்பட்ட பிறகு இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் முன்னணி வகிக்கும் என கருதப்படுகிறது.
பத்து வருடங்களுக்கு மேலாக இந்த விமான நிலைய திட்டம் கிடப்பில் இருந்த நிலையில், தற்போது இறுதி ஒப்புதல்கள் பெற்றதன் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான விமானப் போக்குவரத்துத் வசதிகளை உருவாக்குவதை ஊக்கப்படுத்துகின்றது.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நோக்கியதாக இந்த விமான நிலைய உருவாக்கம் இருக்கும்,என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அமைய இருக்கும் இந்த விமான நிலையம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடியை குறைவதற்கு பெருமளவில் உதவும் எனவும் நம்பப்படுகிறது. .