திருமணம் நடந்து 15 நாட்களே ஆன புதுமாப்பிள்ளையை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல் - திண்டுக்கலில் பதற்றம்
திண்டுக்கல், அனுமந்த நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பிரபாகரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பிரபாகரனுக்கும், தென்றல் என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 15 நாட்கள் ஆகிறது. இந்நிலையில். திண்டுக்கல் சிலுவத்தூரில் உள்ள சூர்யா என்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கார்த்தி, குணசேகரன் ஆகிய நண்பர்களுடன் பிரபாகரன் கலந்து கொண்டுள்ளார்.
அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இத்தாக்குதலை தடுக்க முயன்ற கார்த்திக் என்பவரையும் அந்த மர்மகும்பல் வெட்டியது.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதைப் பார்த்த அந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், மருத்துவமனையில் பிரபாகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
கார்த்திக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்து 15 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.