புதிய முப்படைகளின் தலைமை தளபதி இவரா? - வெளியான புதிய தகவல்
இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவனே அல்லது ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முப்படைகளின் முதலாவது புதிய தலைமை தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகள் இவ்விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

நாட்டின் 27வது ராணுவ தளபதியாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பதவியேற்றார் ஜெனரல் பிபின் ராவத். பணி ஓய்வுக்குப் பின் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார். முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருந்து பிபின் ராவத் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்தார்.
முப்படைகளையும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியவராக முப்படைகளின் தலைமை தளபதி திகழ்ந்தார். முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவிதான் உருவாக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் துணை தளபதி என்ற பதவி உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் இயல்பாகவே புதிய முப்படைகளின் தலைமை தளபதிக்கு அப்பதவியில் இருப்பவரே நியமிக்கப்படுவார்.
தற்போது ராணுவம், விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் தளபதிகள் இல்லாத சூழலில் புதிய தளபதி நியமிக்கப்படும் வரை துணைத் தளபதி அந்த பொறுப்பை வகிப்பது மரபு. அதுபோன்ற சூழ்நிலை தற்போது முப்படைகளின் தலைமை தளபதி விவகாரத்தில் இல்லை.
இதனிடையே பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிய முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
மேலும் நாட்டின் அதிமுக்கியமான முப்படைகளின் தலைமை தளபதி பதவி நியமனத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தவும் விரும்பாது. எனவே விமானப் படை தளபதியான வி.ஆர். சவுதாரி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பொறுப்பேற்றார். கடற்படை தளபதி ஹரிகுமார் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தான் பொறுப்பேற்றார். அதேநேரத்தில் ராணுவ தளபதி நரவனே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருப்பவர் 65 வயது வரை அப்பதவியில் நீடிக்கலாம். இதனால் தற்போதைய நிலையில் முப்படைகளின் தளபதிகளில் சீனியராக எம்.என்.நரவனே தான் அடுத்த முப்படைக்களின் தளபதியாக நியமனம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.