இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்; இது என் உறுதிமொழி - பிரதமர் மோடி!
இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "உங்கள் சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களின் கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்று பேசினார். இந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் "அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என நான் இஸ்லாமிய மதத்தினரை மட்டும் பேசவில்லை, ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஏழை குடும்பத்தையும் பற்றியே பேசினேன். இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்.
என் உறுதிமொழி
அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன். முஸ்லிம் மக்கள் மீதான அன்பை நான் விளம்பரப்படுத்தவிரும்பவில்லை. நான் வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல.
அனைவருக்குமான ஆட்சி என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். அதிக குழந்தைகள் பெற்றவர்கள் என்று யாரேனும் குறிப்பிட்டால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று எப்படி கருதுகிறீர்கள். இஸ்லாமியர்கள் மீது ஏன் நியாயமற்ற முறையை கையாளுகிறீர்கள். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ஏழை குடும்பங்களின் நிலை இப்படித்தான் உள்ளது. எந்த சமூகமாக இருந்தாலும் ஏழ்மை இருக்கும் இடத்தில் அதிக குழந்தைகள் உள்ளனர்.
நான் இந்து என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடவில்லை. ஒரு குடும்பம் எத்தனை குழந்தைகளை கொண்டிருந்தாலும் குழந்தைகளை அந்த குடும்பமே கவனித்துக்கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகளை அரசு கவனித்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளிவிடவேண்டாம். இந்து - முஸ்லிம் பிரிவினையை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். இது என் உறுதிமொழி" என்று தெரிவித்துள்ளார்.