ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் புதிய படம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இதனை இயக்கியுள்ளார்.

கிரிஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் கண்பார்வை இல்லாத போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் சில தினங்களுக்கு முன், "இதுவும் கடந்து போகும்" என்ற முதல் பாடல் வெளியானது.
இந்நிலையில் கொரோனா காரணமாக நெற்றிக்கண் படக்குழுவினர் நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.