நேபாள விமான விபத்தில் 72 பேர் உயிரிழப்பு - ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நேபாள அரசு முடிவு...!
நேபாள விமான விபத்தில் 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதால், ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
நேபாள விமான விபத்து
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன்தினம் காலை எட்டி ஏர்லைன்ஸ்' விமானம் புறப்பட்டு சென்றது.
அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது.
இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமான விபத்தில் 68 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது.
இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. விமானத்தில் இருந்த 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேருமே இறந்து விட்டதாகவும் யாரையும் உயிருடன் மீட்கவில்லை எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பெட்டி மீட்பு
இந்நிலையில், விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று மீட்கப்பட்டது. மேலும், விமானத் தரவுப் பதிவு கருவி, கருப்புப் பெட்டியை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் ராணுவம் ஒப்படைத்துள்ளது.
துக்கம் அனுசரிக்க நேபாளம் அரசு முடிவு
இந்நிலையில், இந்த விபத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், விமான விபத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளதால், ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நேபாளம் அரசு முடிவு செய்துள்ளது.