அய்யா வைகுண்டர் சமையல்கூடம் விவகாரம்.. தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன- காவல் துறை!
அய்யா வைகுண்டர் சமையல்கூடம் விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் வராத சொக்கலிங்கசாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு உள்ள பிரச்சனை தொடர்பாக வருவாய்
கோட்டாச்சியர் அவர்களின் தலைமையில் விசாரணை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு கடந்த 21.02.2025 தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை இருதரப்பும் ஏற்று எழுத்துப்பூர்வமாக ஒப்புகை கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று 04.03.2025ஆம் தேதி உரிமையியல் பிரச்சனை உள்ள இடத்தில் நீதிமன்றத்தை அனுகாமல், ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உள்நுழைந்து அடுப்பினை தீ மூட்ட முற்பட்டுள்ளனர்.
விவகாரம்
இதற்கு எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இதனை முறையாக திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் துறையினர் தடுத்து உரிய சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் தேட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் நடவடிக்கை கண்ணியமாகவும்,நடுநிலைமையுடனும் கையாளப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தற்சமயம் இரு தரப்பும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக தொடர்கிறார்கள்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் காவல்துறை அராஜகம் எனவும், அன்னதானம் நிறுத்தப்பட்டது போல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துக்கொள்ளப் படுகிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.