திருமண வீட்டில் அரிவாள் வெட்டு சம்பவம்.., ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமண வீட்டில் நடந்த அரிவாள் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த வாலிபருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வீட்டின் அருகே பேனர் வைக்கும் போது சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் மணமகன் வீட்டின் அருகே மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களால் பொதுமக்களை சரமாரியாக வெட்டியது.

இந்த தாக்குதலில் ரமேஷ் (49), அருள்மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ராம்குமார் (20), மாடசாமி (19) உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.
அவர்களை ஆலங்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இதில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த கும்பல் பின்னர் நெல்லை மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டி கிராமத்திற்குச் சென்று அப்துல் ரகுமான் (35), முபாரக் (30) ஆகியோரை அரிவாளால் வெட்டியது.
மேலும் அம்பை மற்றும் வாகைகுளம் பகுதிகளிலும் இந்த கும்பல் தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடந்த 5 தாக்குதல் சம்பவங்களில் மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர் அவர்களில் 16 வயதுடைய 3 சிறுவர்களும் உள்ளனர்.
மேலும் தப்பியோடிய ஐயப்பன் என்பவரை பிடிக்க முயன்றபோது அவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் அவரை சுட்டுப்பிடித்ததில் காயமடைந்த ஐயப்பனும், காவலரும் சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.