இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்: ரிசல்ட் நெகட்டிவ் என வந்ததால் குழப்பம்
சென்னையில் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபருக்கு கொரோனா நெகட்டிவ் என குறுச்செய்தி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த பரமேஷ்வரன் என்பவர் மனைவி உமா மற்றும் இரண்டு மகன்களோடு வசித்து வருகிறார். இதனிடையே உமாவிற்கு இலேசான காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
அதன்பின் சென்னை மாகராட்சி ஊழியர்கள் உமாவின் வீட்டிற்கு வந்து கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக கூறி அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 16ஆம் தேதி உமா இறந்தார்.சென்னை மாநகராட்சி சார்பில் உமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உமாவின் செல்போனுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுடைய மாதிரியை கோவிட் 19 பரிசோதனை செய்ததில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக குறுச்செய்தி வந்தை கண்ட கணவர் பரமேஷ்வரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பரமேஷ்வரன் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது தவறுதலாக குறுஞ்செய்தி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை மாநகராட்சியில் இருந்து இருவேறு செய்திகள் வந்து தங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக உமாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.