அனிதா போல 150 மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்கிறது திமுக- காயத்ரி ரகுராம் அதிரடி
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தி அதை தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் கல்லூரி கட்டிடம் இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து முடிக்கும்போது எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும்.

அதன்பின்னர் மாணவர்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது என்று சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் மேலும், தமிழகத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 150 மாணவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு அளித்தும், அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
தற்காலிக இடங்களில் அமைக்க தயக்கம் இருந்தால் ஜிப்மர் மருத்துவமனையில் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , தனியார் கலைக் கல்லூரிகளில் அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளில், புதிய ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது.
இதில் எந்த யோசனையும் ஏற்றுக்கொள்ள உகந்ததாக இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மறுத்திருக்கிறார் என்கிறார். எய்ம்ஸ் கட்டப்படும் மற்ற மாநிலங்களில் தற்காலிக இடங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடங்கிவிட்டார்கள்.
கட்டிடம் முடியும் போது அவர்கள் புதிய கல்லூரியில் தங்கள் படிப்பினை தொடர்வார்கள். திருச்சியில் ஐஐஎம் தொடங்கியபோது கட்டுமானத்திற்கு முன்பே புதிய மாணவர்கள் என்ஐஐடியில் கல்வி பயின்றார்கள் .

மாநில அரசு மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் நிலை எடுத்து போராடிக் கொண்டிருந்தால் மாநிலத்தின் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனடியாக 150 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், பேசுகையில், அனிதா போல தி.மு.க. 150 அனிதாக்களின் ..மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள். தைரியத்தையும் ஆதரவையும் கொடுப்பதற்கு பதிலாக அவர்கள் தோல்விக்கு வழிநடத்துகிறார்கள் மற்றும் வாய்ப்பை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.