நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் தற்கொலை
சேலம் அருகே இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் மாணவன் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்பு என்பது பல தமிழக மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், சேலம் அருகேயும் சுபாஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தை சேர்ந்த கணேசன் - தனலட்சுமி தம்பதியின் மகன் சுபாஷ் சந்திர போஸ்.
கடந்த 2019ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். முதல்முறை எழுதிய நீட் தேர்வில் 150 மதிப்பெண்கள் வெற்றி தோல்வி அடைந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 267 மதிப்பெண்கள் பெற்று மீண்டும் தோல்வி அடைந்துள்ளார். மனமுடைந்த சுபாஷ் கடந்த 1ஆம் தேதி பூச்சிக்கொல்லி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சுபாஷை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே சேலத்தில் சேர்ந்து தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு மாணவர் அங்கு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.