நீட் எழுதியும் கண்ணீர் விடும் மாணவன் - என்னதான் நடக்கிறது நீட் தேர்வில்? மோசடியா, சதியா?
நீட் தேர்வில் 177 வினாக்களுக்கு விடை எழுதிய மாணவருக்கு, வெறும் ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதியதாக ஓஎம்ஆர் ஷீட் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் மாநிலத்திலும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஆயுஸ், கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார். இதற்காக ஒரு வருடத்திற்கு மேலாக பயிற்சி வகுப்புகளுக்கு, சென்று இரவு தூங்காமல் கண் விழித்து படித்து பயிற்சி பெற்று 180 கேள்விகளில் 177 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.எம்.ஆர் ஷீட் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்தபோது வெறும் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துள்ளதாக இருந்ததால் ஆயுஸ் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆயூசின் தந்தை சுசில்குமார் நீட் தேர்வு நடத்துகிற என்.டி.ஏ நிறுவனம், பிரதமர் அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் புகார் அளித்தும் பதில் வராமல் இருந்துள்ளது. எந்தவித பதிலும் வராததால், ஓ.எம்.ஆர் சீட்டில் நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, ஆன்லைன் மூலம் ஒரு கேள்விக்கு 200 ரூபாய் வீதம் 177 கேள்விகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆயுஸ் எழுதிய விடையை சரிபார்க்க விண்ணப்பித்தும் இதுவரை பதில் வரவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.