மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விஎழுப்பியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது.
நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ,தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் கிட்டத்தட்ட 142 நாட்கள் கழித்து தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில், நீட் என்ற சமூக அநீதியை அகற்ற சட்டமன்றத்தால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டுருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் நீட் தேர்வு என்பது பலி பீடம் என கூறிய முதலமைச்சர் சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? என கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார் மேலும், நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு. ஆள்மாறட்டம் நடைபெறுகிறது. ஆள்மாறட்டம் செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பலர் முறைகேடு நடப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறட்டம் முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல மாணவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆகவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு சமூகநீதியை நிலைநாட்டிட கூடியிருக்கிறோம் என கூறினார். நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கிய தேர்வு முறை அல்ல எனவும் தெரிவித்த முதலமைச்சர்.
நீட் மசோதாவுக்கு விலக்கு தர கோரி எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார் மேலும் சட்டசபையின் சட்டமியற்றும் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார் ஆளுநர்.
ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற சூழலை உருவாக்கமாட்டார் என நம்புவதாக கூறிய முதலமைச்சர், நீட் தேர்வில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்