நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லையா? - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நாடு முழுவதும் ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் தொடங்கியது.
பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களையும், உரிய கட்டணங்களையும் neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி மே 6 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் மே 15 ஆம் தேதி வரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.