‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராதங்கப்பதக்கம் வென்றார். அவரது வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்தனர்.
இதனையடுத்து இந்தியா திரும்பிய அவர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதனிடையே சில தினங்களுக்கு முன் கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்ட நீரஜ் சோப்ராவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்தது.
இந்தநிலையில் நேற்று அரியானா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது நீரஜ் சோப்ராவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரஜ் சோப்ராவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.