ஒமிக்ரான் வைரஸை தடுக்க வேப்ப மரத்திற்கு திருமணம்... வேலூரில் நடந்த சம்பவம்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நூதன முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸாக மாறி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேட்டு முள்ளுவாடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீபொன்னியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும் நூதன வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் ஊர் பொதுமக்கள் சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து வேத மந்திரங்கள் முழங்க, ஊர் பெரியவர்கள் குமார், பொன்னன் ஆகிய இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டு வேப்ப மரத்திற்கு தாலி கட்டினர். இதை அடுத்து மகா தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனிதநீர் இரண்டு மரங்களின் மீதும் தெளிக்கப்பட்டது. பின்னர் ஊர் பெரியவர்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் என அனைவரும் மொய் பணம் வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊர் பொது மக்களுக்கு வாழை இலை போட்டு உணவு வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸை தடுக்க கடந்தாண்டு கோவை மாவட்டத்தில் கோயில் கட்டி வழிபாடு செய்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க ராணிப்பேட்டையில் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.