இபிஎஸ் சொல்லி தான்....கொடநாடு கொள்ளை விவகாரம்....கார் டிரைவர் சகோதரர் பரபரப்பு பேட்டி
கொடநாடு கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டுமென ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் சகோதரரின் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கொள்ளை வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது மட்டுமின்றி, அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவங்களில் முக்கிய நபராக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விபத்து ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்த நிலையில், சயான் காயத்துடன் உயிர்தப்பினார்.
அதே போல, கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோடநாடு வழக்கில் தொடர்புடையை நபர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தது பரபரப்பையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தின.
கனகராஜ் சகோதரர்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குச் சென்று வரும் அவர், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, "தனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்துவந்து சிலரிடம் கொடுத்தார் என்றும் கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் தான் சந்தித்தேன் என கூறினார்.தன்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார் என குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் தன்னிடம் கொடுத்ததாக கூறினார்.
பயந்த கனகராஜ்
அதில், பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். கோடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை கனகராஜ் பையில் எடுத்து வைத்திருந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கனகராஜ் தன்னிடம் கூறியதாகவும் தனபால் தெரிவித்தார்.
ஆனால், அதன்பிறகு தான் அவர் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார் என்றும் எனது தம்பி கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்" என்று தனபால் கூறியுள்ளார்.