NDA கூட்டணி தொகுதி பங்கீடு: பாஜக-வுடன் பேச்சுவார்த்தை!
NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பாஜக-விடம் தான் பேச வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஒருசில தினங்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக கட்சி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், NDA கூட்டணி சட்டப்பேரவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது, அதில் அதிமுக இணைந்துள்ளது.
எனவே இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பாஜக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவித்தார்.
தேர்தல் தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிகிறது.
இதற்கிடையே மார்ச் 16ல் ராஜ்யசபா எம்பி-க்கான தேர்தல் நடைபெறவுள்ளது, அதிமுக சார்பில் தம்பிதுரைக்கும், அன்புமணி ராமதாஸ்க்கும் எம்பி பதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
