தற்கொலை செய்துகொண்ட என்.டி.ராமாராவ் மகளின் கண்கள் தானம்
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஷ்வரி, நேற்று ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த போலீசார், உமா மகேஷ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை
மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவிற்கு 8 மகன்களும், லோகேஸ்வரி, புரந்தரேஸ்வரி, புவனேஸ்வரி, உமா மகேஸ்வரி என 4 மகள்களும் உள்ளனர்.
இதில், என்.டி.ராமாராவ் மகள் புவனேஸ்வரியைத் தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார். இறந்து போன உமா மகேஸ்வரி, என்.டி.ஆரின் கடைசி மகள்.
கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்து வந்த உமா மகேஸ்வரி, மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார், உடனடியாக இது குறித்து சந்திரபாபு நாயுடு, இறந்த உமா மகேஸ்வரியின் சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணா உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், பிரேத பரிசோதனைகளை முடித்த பின்னர், உடலை நடிகர் பாலகிருஷ்ணாவிடம் ஒப்படைத்தனர்.
கண்கள் தானம்
இறந்து போன உமா மகேஸ்வரியின் கணவர் ஸ்ரீநிவாச பிரசாத், அமெரிக்காவில் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு விஷாலி, தீக்ஷிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் தான் இரண்டாவது மகள் தீக்ஷிதாவிற்கு திருமணம் நடந்தது.
இவர் தான், உமா மகேஸ்வரி இறந்தது குறித்துபோலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உமா மகேஸ்வரியின் கண்களை, அவரது குடும்பத்தினர் நேற்று தானம் செய்தனர்.
அமெரிக்காவில் இருந்து மகள் விஷாலி வரவேண்டி உள்ளதால், நாளை புதன்கிழமை ஹைதராபாத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.