நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்ட விக்கி...கடுப்பான ரசிகர்கள் - நடந்தது என்ன?
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9ம் தேதி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.
தாய்லாந்து ஹனிமூன்
திருமணம் முடிந்த பிறகு, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.
தற்போது, நயன்தாரா, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பியாட் நிகழ்ச்சி
அதேபோல், விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இதற்கிடையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் நடைபெற்றது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, நிறைவு விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் முன்னின்று கவனித்து வந்தார்.
இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்பெயின் சுற்றுலா
நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் தற்போது சிறிது ஓய்வு கிடைத்துள்ளதால், திருமணம் முடிந்த பிறகு 2-வது முறையாக தனி விமானம் மூலம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஸ்பெயினில் 10 நாட்கள் இவர்கள் தங்குகிறார்கள். இதன் பின், சென்னை திரும்ப உள்ளனர்.
ஊர் சுற்றும் நயன்தாரா - விக்னேஷ்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவிற்கு சென்ற இருவரும் அங்கு பஸ்ஸில் பயணம் செய்வதுபோல, தெருவில் நடந்து செல்வது போல, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடுப்பான ரசிகர்கள்
இந்நிலையில், ஸ்பெயினில் இருந்தபடி விக்னேஷ் சிவன், நயன்தாரா கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்ததும் நயன்தாராவின் ரசிகர்கள் என்ன ரங்கா... இதெல்லாம் நியாயமா... இதுமாதிரியான புகைப்படத்தை வெளியிடாதீங்க... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.