வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை சர்ச்சை - விளக்கம் அளிக்க நயன்தாரா முடிவு...!
வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை சர்ச்சை விவகாரத்திற்கு விளக்கம் அளிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.
சலசலப்பில் தமிழ் சினிமாத்துறை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
விசாரணை வளையத்தில் நயன்-விக்கி
நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. இது குறித்த விசாரணை அறிக்கை பெற்றவுடன் அதில் விதிமீறல் இருக்கிறதா, முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நயன்தாரா விளக்கம் அளிக்க முடிவு
இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்கள் மேற்கொண்ட சட்ட நடைமுறைகள் குறித்து நயன்தாரா கடிதம் மூலம் விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.