பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு - 2 நாட்கள் தேசிய துக்க அனுசரிப்பு என தகவல்
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பின்பு இன்று காலமானார்.
இந்திய திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி பாடகியாக விளங்கியவர் லதா மங்கேஷ்கர்.
பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவர் பாரத் ரத்னா, பத்மபூஷன், பத்மவிபூஷன் உட்பட பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் கடந்த மாதம் 11-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92.
அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும்,
இரு நாட்களுக்கு நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.