வெள்ளை உடை அணிந்த ராணுவ வீரர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது கொரோனா நெருக்கடி காலத்தில் மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவர்கள் நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம் போல அல்லும் பகலும் அரும்பணியாற்றுகின்றனர் மருத்துவர்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடர வேண்டும் என்றும், இந்த அரசு, மருத்துவர்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும்; துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #NationalDoctorsDay வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) July 1, 2021
இது மக்களின் அரசு; மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும்.
நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும். pic.twitter.com/BGyxUq5UzJ
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் தேசிய மருத்துவர்கள் நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடுந்தொற்று வேகமாகப் பரவி வரும் தற்காலச் சூழலிலும் நோய்க்குள்ளாகிய பல கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர் என்பது காலம் உள்ளவரை மானுட சமூகத்தால் நன்றி கூறத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் தேசிய மருத்துவர்கள் நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்!https://t.co/DHedteFxUP#NationalDoctorsDay2021 | #ThankYouDoctors
— சீமான் (@SeemanOfficial) July 1, 2021