பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் குடும்பம் - கடுப்பான அமைச்சர்
நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து நரிக்குறவர் குடும்பத்தை நடத்துனர் ஒருவர் இறக்கி விட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு தினமும் வள்ளியூர் பகுதியில் இருந்து பேருந்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் குழுக்களாக வருவார்கள்.
இவர்கள் நாகர்கோயில் பேருந்து நிலையத்தை சுற்றியும், பேருந்து நிலையத்திலும் ஊசி பாசி விற்பனை செய்வதோடு தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம்.
இதனிடையே மாலை நேரங்களில் இவர்களது குழுக்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டி தகராறில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணிக்க மூன்று குழுக்களாக ஏறியுள்ளனர். அதில் அவர்களுக்குள் சண்டையிட்டபடி சத்தமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம்சுழித்த நிலையில் அவர்களை இறக்கி விட நடத்துனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார்.
இதில் ஏற்கனவே சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அழுது கொண்டு இருந்த குழந்தை ஒரு முதியவர் மற்றும் பெண்மணி ஒருவர் என மூன்று பேரும் அவர்களது உடமைகளுடன் பேருந்தில் இருந்து இறக்கி விடுப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. ஏற்கனவே மீனவ பெண் செல்வமேரி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் தற்போது தான் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் நாகர்கோவிலில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவிட்டுள்ளார்.