‘கிரிப்டோகரன்சி - ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கருவி’ : பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த ஜனநாயக உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர்,
“ஜனநாயக நாடுகள் தொடர்ச்சியாக ஜனநாயக நடைமுறைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், வெளிப்படைத்தன்மை, கண்ணியம், அதிகரத்தை பகிர்ந்தளிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இந்திய நாகரீக பண்பாட்டிலேயே ஜனநாயகம் ஒருங்கிணைந்துள்ளது, 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்களால் இந்திய மக்களிடம் இருந்து ஜனநாயக உணர்வை அழிக்க முடியவில்லை.
2500 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை நதிக்கரையோரம் இருந்த லிச்சாவி, சாக்யா நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு ஆட்சி இருந்திருக்கிறது,
10ம் நூற்றாண்டை சேர்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் ஜனநாயக நடைமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது”என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் வெளிப்படையாக செயல்படுவதாகவும், சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தற்போது வளர்ந்து வரும் சமூக ஊடகங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பயன்பாடுகளை ஒழுங்குபடுத்த சர்வதேச அளவில் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும்,
இதன்மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கருவியாக அவற்றை மாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.