நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
நாங்குநேரில் அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நேற்றுமுன்தினம் சிலர் டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் டீக்கடையில் பெட்ரோல் வெடிகுண்டை வீசியதுடன் அரிவாளால் வெட்டிவிட்டு வாகனத்தில் தப்பிச்சென்றனர்.
இதில் மாற்றுத்திறனாளியான ஜான் மார்க்(வயது 45) என்பவரும், ஒடிசாவை சேர்ந்த திரிநாத் கட்டா(வயது 50) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து குற்றாவளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது, பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர், பாதுகாப்பு கருதி அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொலிசார் பேசியும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

இந்நிலையில் நேற்று மாலை ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர், தென்னிமலை பகுதியை சேர்ந்த கண்ணன் (20), அந்தோணி மைக்கேல் ராஜ் (19), பருத்திப்பாடு பகுதி உச்சிமகாளி என்ற மண்டை (23), மூன்றடைப்பு வசந்தகுமார் (19), நாங்குநேரி சுப்பையா என்ற சுபாஷ் (19), கல்யாணி (20), நாங்குநேரியை சேர்ந்த இசக்கிராஜா என்ற பிடி ராஜா (19) ஆகிய 7 பேரை கைது செய்தனர், மேலும் இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில், நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் யார் சமூகம் பெரியது என்பதை நிரூபிப்பதற்காக இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.
7 பேரில் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்யாணி, சுபாஷ் ஆகியோர் கடந்த 2023ஆம் ஆண்டு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்ற மாணவரை வீடு புகுந்து தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.